ஊடகவியலாளர்களின் சமூக வலைத்தள பதிவால் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் அவசர குடுக்கைத்தனமாக செயற்பட்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களின் பங்கேற்புடன் தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் பொறியியலாளர்கள் பிரிவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நேற்று மாலை விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
கலந்துரையாடலின் நடுவில் பிரதி அமைச்சர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது திடீரென மின் துண்டிப்பு ஏற்பட்டது.
இதனை அவதானித்த ஊடகவியலாளர்கள் அதனை காணொளியாக்கியதுடன் இலங்கை மின்சார சபையை தொடர்புகொண்டு மின்வெட்டை உறுதிப்படுத்தினர்.
இதனையடுத்து ஊடகவியலாளர்கள் குறித்த விடயத்தை தமது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினர்.
எனினும், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், இலங்கை மின்சார சபையை தொடர்புகொண்டு குறித்த விடயத்தை ஆராயாமல் அவசர குடுக்கைத்தனமாக ஊடகவியலாளர்களுடன் “இது மின்வெட்டல்ல மண்டபத்தில் மாத்திரமே மின் துண்டிக்கப்பட்டது” என தெரிவித்து தர்க்கம் புரிந்துவிட்டு சென்றார்.
சில நிமிடங்களில் மீண்டும் வந்த நாடாளுமன்ற உறுப்பினர் தான் தவறாக கூறிவிட்டேன் என தெரிவித்து ஊடகவியலாளர்களிடம் வருத்தம் தெரிவித்தார்.