எமது நோக்கம் இந்தியாவைக் காப்பாற்றுவதோ, மோடியை காப்பாற்றுவதோ அல்ல என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமரின் வருகை குறித்த கேள்விக்கு மேலும் பதிலளித்த அவர்,
மீனவர் பிரச்னை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி இந்தியப் பிரதமருடன் கலந்துரையாடவுள்ளார். இந்தியப் பிரதமரின் வருகை வெறுமனே மீனவப் பிரச்சனைக்கு மட்டும் வரையறுக்கப்பட்ட ஒன்றல்ல.
இந்தியாவுக்கும் எமக்கும் எந்தவித பகையும் அல்ல. இந்திய மீனவர்களுக்கும் எமக்கும் எந்தவித கோபங்களும் இல்லை.
இந்திய மீனவர்கள் தடைசெய்யப்பட்ட ட்ரோலர்களைப் பயன்படுத்தி உங்களின் கடற்பரப்பில் நுழைய முடியாது. வடக்கில் உள்ள கடற்பரப்பை முற்றாக அளித்து ஒழிக்கும் நடவடிக்கையையே மேற்கொள்கிறார்கள்.
இந்த நடவடிக்கைகள் தொடருமாக இருந்தால் இன்னும் பத்து பதினைந்து வருடங்களில் கடல் பாலைவனமாக மாறுவதை தவிர்க்க முடியாது. இதனை யாரும் அனுமதிக்க முடியாது.
எனது வேலை இந்திய அரசாங்கத்தை பாதுகாப்பதோ, இந்தியத் தூதுவரைப் பாதுகாப்பதோ, இந்தியப் பிரதமரைப் பாதுகாப்பதோ அல்ல. எமது மீனவர்களைப் பாதுகாப்பதே.
அந்த வேலையை சரிவர செய்கின்றேன் என்று நான் நம்புகின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.