வடமராட்சி கிழக்கு குடத்தனை பொற்பதியில் சிறுமி ஒருவரை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியமை சம்பந்தமாக தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சட்ட வைத்திய அதிகாரி மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
மேற்படி பகுதியில் 14 வயது சிறுமி ஒருவர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (23) மாலை அயலில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு பொருட்கள் வாங்க சென்றதாகவும் அங்கு இனிப்பு வகையை கையாடியதாக கூறி கடையின் உரிமையாளரான பெண் சிறுமியை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் உடல் காயங்களுக்கு உள்ளான சிறுமி அன்று இரவே பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொண்ட பருத்தித்துறை சட்ட வைத்திய அதிகாரி சிறுமியின் உடலில் காயங்கள் காணப்படுவதன் காரணமாக தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு வைத்தியசாலையில் உள்ள பருத்தித்துறை பொலிஸார் ஊடாக மருதங்கேணிப் பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் மருதங்கேணிப் பொலிஸார் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைத்து சிறுமியிடம் வாக்கு மூலம் பெற்ற போது மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதாக சிறுமி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து தாக்கியதாக கூறப்படும் பெண்ணின் வீட்டுக்கு பொலிஸார் சென்றபோது அங்கு வீடு பூட்டி இருந்ததனால் இது தொடர்பில் தொலைபேசி ஊடாக அவர்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இச் சம்பவம் தொடர்பில் அப்பகுதியைச் சேர்ந்த பொது அமைப்பால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தில் தொலைபேசி வழியாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.